இறப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி.
இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.
இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது.
ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது"
சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.
அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?
இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன.
சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள்.
அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷ¥வைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷ¥வின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது தªமாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள்.
மற்றுமொரு நிகழ்ச்சி. Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் டாக்டர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது.
இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது-
அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" - கென்னத் ரிங் கின் Lessons from the Light".
இதுபோன்ற அனுபவங்கள், இவைகளை வெறும் மனப் பிரமையென்றோ, கட்டுக்கதைகள் என்றோ ஒதுக்கிவிட முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த அனுபவங்கள் ஏற்பட்டவர்கள் இந்த பூமியை விட்டு வேகமாகத் தாங்கள் செல்வதை உணர்கிறார்கள். பிறகு ஒரு ஒளிநிறைந்த அன்புமயமான இடத்தை அடைகிறார்கள். அங்கு முன்னமே இறந்த அவர்களது உறவினர்கள் அவர்களை 'நீங்கள் இங்கே வருவதற்கு நேரம் இன்னும் வரவில்லை, இன்னும் பூமியில் நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது", எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த உலகிற்குத் திரும்பி வந்தவுடன் எப்படி தனது இறப்பு அனுபவம் ஒரு ஆனந்தத்தை அளித்தது என உணர்கிறார்கள். ஆனால், அந்த அனுபவத்தைப்பற்றி மற்றவர்களிடம் விளக்க சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. அவர்கள் அதற்குப்பிறகு சாவைக்கண்டு அஞ்சுவதில்லை. இந்த பூதவுடல் மறைந்தபிறகும் 'நான்'- 'எனது ஆன்மா' உயிர்வாழ்கிறது என அறிகிறார்கள் .
அதற்குப்பிறகு அவர்களது அணுகுமுறையில், மற்றவர்களை மன்னிப்பதில், அன்புகாட்டுவதில், உதவி செய்வதில் ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறார்கள்- இந்த அனுபவம் அவர்கள் வாழ்ந்த வாழ்வை, செய்த நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சில நொடிகளில் அவர்கள் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவர்களைப் பண்பட்டவர்களாக்குகிறது.
சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இறந்தபின் என்ன நடக்கிறது எனபது பற்றிப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் பெருவாரியான மக்கள், விஞ்ஞானம், காலம் காலமாக ஆவி பற்றியும் ஆத்மா பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன எனக் கருதினார்கள். ஆவி உலகம் பற்றி நம்பிக்கை பெருகியது. இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள மக்கள் ஊடகங்களைத் துணை தேடலானார்கள். அவர்கள் இன்னமும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதில் திட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
1882ல் ஒரு உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு இறப்புக்குப் பின் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் துவங்கின. ஆனால் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. 1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர், 'இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்' (Deathbed Visions) என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்குமுன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்” என்று சொல்கிறார். இறக்கும்போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலைவிட்டு ஆவிபிரிவதைக் காண முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் இன்று வளர்ந்துவரும் மருத்துவ உலகில், இறக்கும் நிலையில் ஏற்படும் அனுபவங்கள் என்பவை அரிதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், இறக்கும் தருவாயிலிருப்பவர்களைச் சுற்றி நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்; தேவையான மருத்துவ வசதிகள் இருக்காது . இன்றோ பலருக்கு மருத்துவ மனையில் தான் உயிர் பிரிகிறது.- உயிர் பிரியும்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். உற்றார் உறவினர் யாருமின்றி தனித்து மருத்துவவமனையில் இறப்பவர்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதையே இது காட்டுகிறது.,
1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர், இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.
பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடி, மிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். .இந்தச் சந்தேகங்களுக்கு விரைவிலேயே தீர்வு கிட்டியது. ஒரு இருதய நோய் நிபுணர் இறக்கும் தறுவாயிலிருந்த 2000 பேர்களிடம் பேசிய 20 வருட அனுபவம், மூடி கூறுபவை சரியென்று சான்றுரைக்கின்றன என்கிறார். சைப்ரஸிலிருந்து ஒரு பெண் எழுதும் அனுபவமொன்று மூடி கூறுவது சரியாயிருக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன். பிறகு... நான் ஒரு இருண்ட இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.
இதற்குப்பிறகு சில ஆண்டுகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல் சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங் 'அமைதி, உடலைவிட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப்பாதையை அடைவது, வெளிச்சத்தைக் ககாண்பது, ஒளியை அடைவது' என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.
இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம், அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதுதான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை.
இறப்பிற்கு முன் ஏற்படும் அனுபவத்தைப் பெறுவதற்கு சாவின் விளிம்புவரை செல்லவேண்டுமா என்பது ஒரு கேள்வி - "இல்லை" என்பதுதான் இதற்கான பதில். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் களைப்பாக இருப்பவர்கள், மற்றும் சாதாரணமாக உழைப்பவர்களிடம்கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப்போல உண்மையானதாகவே தோற்றமளிக்கின்றன. ஒரு சுரங்கப் பாதைக்குள் போவதுபோலத் தெரியும் அனுபவம், ஒரு கற்பனைத் தோற்றமாகத் தெரிவதில்லை.- உடலுக்கு வெளியிலிருந்து நம்மைப் பார்ப்பதாகக் காணப்படும் இத்தோற்றம் உண்மையிலேயே நடப்பதாகவே தோன்றுகிறது.
சாவின் விளிம்பிற்குச் செல்லும் எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் எத்தகைய மனிதர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்படக்கூடும்? மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த அனுபவங்கள் ஏற்படும் என்றும் சொல்வதற்கில்லை. இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் எல்லாரையும் போல பின்புலனும், மனதளவில் ஆரோக்கியமானவர்களுமாகவே இருக்கிறார்கள்.
இதைத்தவிர வரவேற்கவேண்டிய ஒரு விஷயம், இந்த அனுபவம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் போட்டி, பொறாமை, பேராசை போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களின் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது எ?ன்பது பற்றிய ஆராய்ச்சி, இந்த மனமாற்றத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. எந்த ஆராய்ச்சியும் இதற்கு விடை காணாமல் முழுமையாய் இருக்க முடியாது.